வன்கூவர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹேஸ்டிங்ஸ் வீதி மற்றும் டன்லெவி அவென்யூ ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு பொலிஸார் விரைந்து தேடுதலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என வன்கூவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்டவர் குறித்த விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவரை இலக்குவைத்து இந்தத் துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும் துப்பாக்சியால் சுட்டுவிட்டுத் தலைமறைவான நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, வன்கூவரின் - ஓப்பன்ஹைமர் பூங்காவை அண்மித்த பகுதியில் நேற்று மாலை மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வன்கூவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு இதுவரை வன்கூவர் ஓப்பன்ஹைமர் பார்க் மற்றும் டவுன்டவுன் ஈஸ்ட்சைட் ஆகிய பகுதிகளில் தனி நபர்களிடம் இருந்து 453 சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.